2வது முறையாக இறந்த போதை மருந்து கடத்தல் தலைவன்

செவ்வாய், 11 மார்ச் 2014 (14:59 IST)
2010 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாத அறிவிக்கப்பட்ட போதை மருந்து கடத்தல் தலைவன் மீண்டும் சமீபத்தில் கொல்லப்பட்டாத அறிவிக்கப்பட்டது மெக்சிகோ நாட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
FILE

மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் குழுக்களைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாகப் போராடி வருகின்றது. அந்த வகையில், 13 வருடங்களுக்கு முன்னால் சிறையிலிருந்து தப்பித்த பிரபல கடத்தல் குழுத் தலைவனான ஜோவகுவின் எல்சாப்போ கஸ்மன் இரண்டு வாரங்களுக்குமுன் எந்தவித தாக்குதல்களும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.

ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டில் அரசுத் துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட மிச்சோகன் என்ற மேற்கு மாநிலத்தின் கடத்தல் தலைவன் நசாரியோ மோரினோ கொன்சாலஸ், மீண்டும் நேற்று நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதலில் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வினோதமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு நாட்கள் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கொன்சாலஸ் இறந்ததாகக் காவல்துறை அறிவித்தபோதும் அவரது உடலை அவர்களால் மீட்கமுடியவில்லை. ஆனால், பொதுமக்கள் அவரது நடமாட்டத்தைத் தொடர்ந்து பார்த்ததாகக் கூறி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி முதல் அவரது இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

நேற்று அவரது கடத்தல் தொழிலின் இருப்பிடமாக விளங்கிய தொலைதூர விவசாய மலை நகரமான டிம்பஸ்கேட்டியோவில் கடற்படை மற்றும் ராணுவப்படைத் துருப்புகள் அவரை சுற்றி வளைத்தன. அப்போது நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் விரல் ரேகைமூலம் அவரது அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைவர் தோமஸ் செரோன் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்