' ஒபாமாவின் ஆப்கான் திட்டம் பாக்.கை பாதித்துவிடக்கூடாது '

புதன், 2 டிசம்பர் 2009 (19:00 IST)
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புதிய திட்டம் தங்கள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 30,000 அமெரிக்கப் படையினரை அனுப்புவது உள்ளிட்ட புதிய திட்டத்தை ஒபாமா நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் ஒபாமாவின் இந்த புதிய திட்டம் தங்கள் நாட்டுக்கு ( தாலிபான்கள் மூலம் ) பாதிப்பை ஏற்படுத்திவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய திட்டத்தை அந்நாட்டுடன் இணைந்து முழு அளவில் செயல்படுத்துவதற்கான பாகிஸ்தான் எதிர்நோக்கி உள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஒபாமாவின் புதிய திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கான் தாலிபான், ஆப்கானுக்கு கூடுதலாக அமெரிக்க படையினரை அனுப்பும் திட்டம் எடுபடாது என்றும், இது தங்களது மன உறுதியைத்தான் மேலும் வலுவானதாக ஆக்கும் என்றும் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்