‘சுடர் ஒளி’ ஆசிரியர் கைது: மூத்த தமிழ் பத்திரிகையாளர்களிடம் விசாரணை

ஞாயிறு, 1 மார்ச் 2009 (17:53 IST)
சுடர் ஒளி மற்றும் உதயன் ஆகிபத்திரிகைகளின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ந.வித்தியாதரன் மீதான விசாரணையின் தொடர்ச்சியாக மூத்த தமிழ் பத்திரிகையாளர்கள் சிலர் மீதும் விசாரணைகள் நடைபெறுகின்றன. இதே போல் ஆங்கில செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் மூத்த தமிழ் பத்திரிகையாளர்கள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மூத்த தமிழ் பத்த்ரிகையாளர் வித்தியாதரன் கைது விடயத்தில் ஏனைய மூத்த பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என புலிகளின் ஆதரவு இணையதளமான புதினம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு நகரின் தெமட்டகொடையில் உள்ள குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு மூத்த பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டு மிகவும் சிநேகிதமான முறையில் தனித்தனி விசாரணைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாதரனுடன் இவர்கள் ஏற்படுத்திக் கொண்ட தொலைபேசி தொடர்புகள் குறித்தும், சொந்த ஊர், நிரந்தர முகவரி தொலைபேசி இலக்கங்கள் பதியப்பட்டு சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலம் ஒன்றில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளே கூடுதல் விசாரணக்கு உட்படுத்தப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கத்தை மேற்கோள்காட்டி கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்