விக்கிபீடியா ஒருநாள் சேவை நிறுத்தம் தொடங்கியது

புதன், 18 ஜனவரி 2012 (13:23 IST)
FILE
சர்வதேச இணையதளங்களை தணிக்கை செய்ய புதிய மென்பொருட்களை கொண்டுவருவதால் இணையதளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வது போன்றதாகும் என்பதால் இன்று காலை 10.30 மணி முதல் உலகில் ஒரு நாளைக்கு அதிக நபர்கள் பார்வையிடும் மிக முக்கியமான விக்கிபீடியா இணையதளம் தனது ஒருநாள் சேவை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.

விக்கிபீடியாவை இப்போது திறப்பவர்களுக்கு கிடைப்பதெல்லாம் "இமாஜின் எ வேர்ல்ட் விதவுட் ஃப்ரீ நாலெட்ஜ்" என்று கருமையான பிண்ணணியில் வெள்ளையாக எழுதப்படும் வாச்கங்கள் மட்டுமே.

இணையதளங்களை தணிக்கை செய்யும் அமெரிக்க அரசின் மசோதா பற்றிய விவரங்களுக்கான இணைப்பும், சட்டத்தை இயற்றுவோரை அணுகும் விதம் எப்படி என்ற விவரங்களும் மட்டுமே இன்னமும் 24 மணிநேரத்திற்கு விக்கிபீடியாவில் இருக்கும்.

இதற்கு முன்னதாக விக்கி பீடியாவின் இத்தாலிய பதிப்பு பெர்லுஸ்கோனியின் இணையதள சென்சார் நடவடிக்கையை எதிர்த்து சேவை நிறுத்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது ஒரு ஆங்கில பதிப்பு முழு சேவை நிறுத்தம் செய்வது இதுவே முதல் முறை.

விக்கி பீடியாவின் 5 தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நடத்தை விதிகளில் "நடுநிலையான கோணத்திலிருந்து எழுதுவது" என்பது மிகவும் முக்கியமானதாகும்.

விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கூறுகையில், சில விவகாரங்களில் விக்கிபீடியா சரியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நடுநிலையைத் தவறவிடுவதில்லை என்றார்.

"என்சைக்ளோபீடியா நடுநிலையானதுதான், ஆனால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அது வேடிக்கை பார்க்காது" என்றார் அவர்.

அம்ரிக்காவில் தணிக்கை மசோதா நிறைவேறுமெனில் ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிபோகும். ஆனால் அமெரிக்க தரப்பு என்ன கூறுகிறது எனில் அமெரிக்க பொருட்களை கள்ளச்சந்தையில் அயல் நாடுகளில் இன்டெர்னெட் மூலம் விற்பதைத் தடுக்கவே இந்த புதிய மசோதா என்கிறது. அமெரிக்காவின் இந்த வாதத்திற்கு அமெரிக்க திரைப்பட மற்றும் இசை தொழில்துறையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் கூகுள், ஃபேஸ்புக், யாஹு, டுவிட்டர், ஈ-பே, ஏ.ஓ.எல். ஆகிய இணையதளங்கள் அமெரிக்க அரசின் இந்தச் செயல் சுதந்திரப் பேச்சுரிமையை பறிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது எதிர்ப்பை தனது முகப்புப் பக்கத்தில் வித்தியாசமாகக் காட்டும் என்று கூறியுள்ளது.

டுவிட்டர் சி.இ.ஓ. கூறுகயில், தேசிய அரசியலின் ஒரு தனிப்பட்ட விஷயத்தை எதிர்க்க முழு சேவையையும் நிறுத்துவது முட்டாள்தனமானது என்று மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளார்.

எப்படியிருந்தாலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட முடியாதது என்று வேறு தரப்புகள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்