ரஷ்யாவில் வன்முறையை தூண்டி விடுகிறது அமெரிக்கா: புடின்

வெள்ளி, 9 டிசம்பர் 2011 (20:16 IST)
ரஷ்யாவில் வன்முறையை அமெரிக்கா தூண்டி விடுவதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டி உள்ளார்.

ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது.எனினும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை.

அத்துடன் தேர்தலில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன.எனவே முறைகேடுகள் நடந்துள்ளதால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

புடினை எதிர்த்து மாஸ்கோவில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இதற்கு அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தான் காரணம் என்று ரஷ்ய பிரதமர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து புடின் கூறியதாவது: அமெரிக்காவுக்கு நிகராக அணுசக்தி கொண்ட பலத்துடன் ரஷ்யா இருக்கிறது.அதை பலவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்ய தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஹிலாரி கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய எதிர்க்கட்சிகளை வன்முறையில் ஈடுபட தூண்டிவிட்டுள்ளார்.

அத்துடன் வன்முறையை தூண்டிவிட கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களையும் அமெரிக்கா செலவிட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்