யு.எஸ். தூதரக அதிகாரியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் தடை

செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (20:32 IST)
பாகிஸ்தான் நாட்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரியை, அந்நாட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்க லாகூர் உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்டு டேவிஸ் என்பவர், கடந்த வாரம் லாகூரில் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்குடன் இரண்டு பேர் ஆயுதங்களுடன், அவரது காரை நெருங்கியதாகவும், இதனையடுத்து அவர் தற்காப்புக்காக அவர்களை சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் லாகூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த,மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்து,காவலில் வைத்தனர்.

இதனையடுத்து அந்த தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.ஆனால் அதனை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டேவிசை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்