மும்பை தாக்குதல் : சயீத்திற்கு எதிராக ஆதாரம் கேட்கிறது பாக். நீதிமன்றம்

திங்கள், 13 ஜூலை 2009 (20:40 IST)
மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் முகமத் சயீத்தை சிறையிலடைக்க , அவருக்கு எதிரன வலுவான ஆதாரத்தை அளிக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னணியிலிருந்து சயீத் மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாற்றப்பட்ட நிலையில், அவரை கடந்த டிசம்பர் மாதம் முதல் பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது.

இதனையடுத்து தம்மை விடுவிக்கக்கோரி சயீத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், அவரை கடந்த மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் மைய அரசும், பஞ்சாப் மாகாண அரசும் தனித்தனியாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தன.

இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் சவுத்ரி தலைமையிலான அமர்வு , சயீத்தை சிறையிலடைக்க , அவருக்கு எதிரான வலுவான ஆதாரத்தை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டதோடு , இவ்வழக்கு விசாரணையையும் நாளை வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

சயீத்தின் நடமாட்டத்திற்கு மட்டுமே ஐ.நா. தடை விதித்துள்ளதாகவும் , எவ்வித ஆதாரமும் இல்லாமல் தனி நபர் ஒருவரது சுதந்திரத்திற்கு அரசு தடை போட முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவின்போது குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்