மன்னிப்பு கோரும் அளவிற்கு எனது கணவர் குற்றம் செய்யவில்லை - பொன்சேகா மனைவி

சனி, 2 அக்டோபர் 2010 (17:12 IST)
இந்நாட்டு அதிபர் எனது கணவருக்கு கொடுத்துள்ள சன்மானமே 30 மாத சிறைத் தண்டனை. அவர் மன்னிப்பு கோருமளவிற்கு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று பொன்சேகா மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.

30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்று வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலைக்கு சென்று பொன்சேகாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த பொன்சேகா மனைவி அனோமா செய்தியாளர்களிடம் பேசினார்.

30 ஆண்டுக்கால யுத்தத்தை வென்று நாட்டை மீட்டுத் தந்தவர் இராணுவ வீரரான எனது கணவருக்கு இந்நாட்டு அதிபர் கொடுத்துள்ள மிகப்பெரிய பரிசு இது என்று கூறினார்.

நீதுத்துறையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அங்கிருந்து எனது கணவருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என் கூறிய அனோமா, மன்னிப்பு கேட்பது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஏனென்றால், மன்னிப்பு கேட்டும் அளவிற்கு அவர் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என்று அனோமா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்