போர்க் குற்ற நீதிமன்றத்தில் சிறிலங்க அரசு நிறுத்தப்படலாம்: யு.எஸ். எச்சரிக்கை

செவ்வாய், 1 மார்ச் 2011 (20:20 IST)
FILE
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்காக பன்னாட்டுப் போர்க் குற்ற நீதிமன்றத்தில் சிறிலங்க அரசு நிறுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான செயலர் இராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பேரவையில் பேசிய இராபர்ட் பிளேக், “தமிழ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக பன்னாட்டு போர்க்குற்ற தீர்ப்பாயத்தை சிறிலங்க அரசு எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உள்ளது. சிறிலங்க அரசு மீது பன்னாட்டு விசாரணை திணிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் நடந்து முடிந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு, இப்பிரச்சனையில் அமெரிக்கா முதல் முறையாக கடுமையான குரலில் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்தவுடன், அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அப்போரில் நடந்த படுகொலைகள் குறித்து விவாதிக்க அப்போதும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சிறிலங்க அரசிற்கு எதிராக சுவிட்சர்லாந்து நாடு விசாரணைத் தீ்ர்மானம் கொண்டு வந்தது.

அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியாவின் தூதர் கோபிநாத் அச்சங்கரே கடுமையாக பேசினார். சீனா, இரஷ்ய நாடுகளுடன் இணைந்து சிறிலங்க அரசிற்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்ததில் இந்தியாவின் தூதர் முக்கிய பங்களித்தார். அது மட்டுமின்றி, தன்னை பாராட்டிக்கொண்டு சிறிலங்க தூதர் கொண்டு வந்த தீர்மானத்தையும் நிறைவேற்றிட இந்தியா உதவியது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்