பேச்சுவார்த்தையில் பாக்.ராணுவம் பங்கேற்க முடியாது : இந்தியா

வெள்ளி, 24 ஜூலை 2009 (19:32 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது ஐஎஸ்ஐ உளவு அமைப்பையோ பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

பாகிஸ்தானின் கொள்கையை உருவாக்குவதில் தங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாலும், பாகிஸ்தானின் உண்மையான அதிகார மையங்களாக தாங்கள் திகழ்வதாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் தாங்களும் இடம்பெற விரும்புவதாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யும் , ராணுவமும் கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவமோ அல்லது ஐஎஸ்ஐ யோ பங்கேற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர்களை பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்றும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவது என்பது, பயங்கரவாதத்திற்கு எதிராக அந்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கையை பொருத்தே அமையும் என்றும்,அதுவும் விரிவான முறையில் அல்லாமல் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் மட்டுமே உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்