பாடுவதை நிறுத்த மறுத்த வெளிநாட்டவர் குத்தி கொலை

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (12:38 IST)
FILE
தாய்லாந்தில் பாடுவதை நிறுத்த மறுத்த அமெரிக்க சுற்றுலா பயணி இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் கிராபி என்ற இடத்தில் உள்ள ஆவோ நங் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது.

இசை நிகழ்ச்சியின்போது, விடுதி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடகர்கள் மூன்று பேர் பாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது 51 வயதான பாபி ரே கார்ட்டர் என்ற அமெரிக்கர் தனது 27 வயது மகனுடன், அவர்களுக்கு விருப்பமான பாடல் ஒன்றை பாடகர்களிடம் தெரிவித்து அதனை பாடும்படி கேட்டனர்.

பாபியின் கோரிக்கையை மறுத்து, பாடகர்கள் வேறு ஒரு பாடலை பாடத்துவங்கியதால் கோபமடைந்த அவர் மேடையின் மீது ஏறி பாடகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், பாடகர்களுடன் சேர்ந்து பாடுவதாக கூறி, விடுதியில் இருந்த அனைவரையும் தொந்தரவு செய்துக்கொண்டிருந்தார். போதையில் இருந்ததால் இவ்வாறு நடந்துக்கொண்டிருந்த பாபியை பல முறை எச்சரித்தும் அவர் அதை கேட்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பாடகர்கள் பாபியை ஒரு இரும்பு கம்பியால் தாக்கினர். இதனை தடுக்க வந்த அவரது மகனையும் தலையில் தாக்கியுள்ளனர்

உடனடியாக மருத்துவமனைக்கு பாபியை அழைத்து சென்றபோதும் அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு காரணமான மூன்று பாடகர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விடுதிக்கு வெளியே வந்த பின்னரே இரு பிரிவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், கத்திக்குத்து பட்ட பாபி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்