பயங்கரவாதத்தை ஒழிக்க தனித்த, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: பா‌க்.!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:13 IST)
பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவை தெற்கு ஆசியாவிற்கு முக்கிய சவால் என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, இவற்றை ஒழிக்க தனித்த, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (சார்க்) மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று துவங்கிய சார்க் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய கிலானி ஜூலை 7, காபூல் இந்திய தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தின் குரூர கரங்களில் பாகிஸ்தானும் அகப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட கிலானி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த டிசம்பரில் படுகொலை செய்யபட்டதை சுட்டிக்காட்டினார்.

குற்ற வழக்குகளில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக சார்க் அயலுறவு அமைச்சர்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை வரவேற்ற கிலானி, “பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் தனித்தும், ஒருங்கிணைந்தும் போராட வேண்டும” என்றார்.

இந்தாண்டு இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடக்க உள்ள சார்க் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, காபூல் இந்திய தூதரகம் மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-க்கு தொடர்புள்ளது என்று முதலில் ஆப்கானிஸ்தானும், பின்னர் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வும் தெரிவித்துள்ளது பற்றி கிலானி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்