செயற்கை இனிப்புகளால் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு

திங்கள், 11 மார்ச் 2013 (14:31 IST)
FILE
சமீபகாலமாக அனைவராலும் மிக அதிக அளவில் உபயோகிக்கப்படும் செயற்கை இனிப்புகளால் புற்றுநோய் வர வாய்ப்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படும் ஆஸ்பர்டேம் என்ற செயற்கை இனிப்பு, 1974 ஆம் ஆண்டிலிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது பாதுகாப்பானது என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகக் குழுவும் அங்கீகரித்துள்ளது.

டயட் கோக் போன்ற பிரபலமான குளிர்பானங்களில் இது சேர்க்கப்படுகிறது.இத்தகைய குளிர்பானங்களை ஏராளமானோர் பருகி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சசெக்ச் பல்கலைகழகத்தில் விஞ்ஞானப் பேராசிரியராக பணியாற்றுபவரும், உணவுக் கொள்கையில் நிபுணருமான எரிக் மில்ஸ்டன், குறைப்பிரசவம், கேன்சர் போன்ற நோய்களுக்கு இவ்வகை செயற்கை இனிப்புகள் காரணமாகலாம் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வகை இனிப்புகளின் செயல்பாடுகளை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள உணவுத்தர மையத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய எரிக், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகக்குழுவின் அங்கீகாரம் தவறானது என கருவதாகவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்