சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (21:08 IST)
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது செய்யப்பட்டிருப்பது தேவையற்ற செயல் என கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்நடவடிக்கை இலங்கையில் பெரிய பிளவுக்கு வழிவகுத்துவிடும் என அச்சம் வெளியிட்டுள்ளது.

பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, வெள்ளை மாளிகை பேச்சாளர் பிலிப் கிரவ்லி, இலங்கையின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கம், ஜனநாயக நடவடிக்கைகளுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ள அவர், தேர்தலின் போது இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா, அமெரிக்க கிரீன் கார்டு அனுமதியை கொண்டுள்ள நிலையில், இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது, இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்