கருப்பையை அகற்றிவிட்டு கையுறையை வைத்து தைத்த மருத்துவர்கள்
செவ்வாய், 3 டிசம்பர் 2013 (11:55 IST)
இங்கிலாந்தில் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் கையுறையை வைத்து தைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE
இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் பிர்க்ஸ். 42 வயதாகும் இவர் அவரது கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த நவம்பர் மாதம் ராயல் டெர்பி மருத்துவமனைக்கு சென்றார்.
நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கருப்பை அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தார்.
அடிவயிற்றில் பயங்கர வலியாக இருப்பதை அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தபோது, அவர்களும் தொற்று தடுப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை வழங்கினர். ஆனாலும், ஷாரோனுக்கு தொடர்ந்து வலி இருந்து வந்தது.
FILE
வலி குறையாத நிலையில் கழிவறையை பயன்படுத்த சென்ற ஷாரோன் அவரது உடலில் வேறொரு பொருள் உள்ளது என்பதை உணர்ந்தார்.
இதுகுறித்து அவர் மருத்துவர்களிடம் தெரிவித்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அறுவை சிகிச்சையின்போது போது மருத்துவர்கள் பயன்படுத்திய கையுறைகளில் ஒன்று ஷாரோனின் உடலுக்குள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக, ஷாரோன் பிர்க்ஸ்க்கு அவசர அவசரமாக மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் வயிற்றுக்குள் இருந்த கையுறையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இந்த தவறு எப்படி நடந்தது என்று மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக ஷாரோனிடம் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுள்ளதாக ராயல் டெர்பி மருத்துவமனை தலைமை நிர்வாகி சியு ஜேம்ஸ் கூறியுள்ளார்.