கனடாவில் 2 இந்தியப் பெண்மணிகள் கொலை!

புதன், 15 அக்டோபர் 2008 (01:55 IST)
டொராண்டோ: கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இரண்டு பெண்மணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு 20 வயது இளம்பெண் காயமடைந்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சாரம்மா வர்கீஸ் (65), இவரது மகள் சூசன் ஜான் (43) ஆகியோர் வீட்டினுள் புகுந்த அண்டை வீட்டைச்சேர்ந்த ஒருவர் தாயையையும் மகளையும் படுகொலை செய்துள்ளார். சூசன் ஜானின் மகள் சாரா ஜான் இந்த தாக்குதலில் படு காயமடைந்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சந்தேகத்திற்குரிய அந்த அண்டை விட்டுக்காரரான ஓ'பிரையன் என்பவரை கனடா காவல்துறை கைது செய்துள்ளது.

கொலைக்கான தெளிவான் காரணங்கள் இன்னமும் தெரியவில்லை. ஆனால் களவு முயற்சியில் ஏற்பட்ட தோல்வி கொலையில் முடிந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இவர் கொலை செய்யப்பட்ட சாரம்மா வர்கீஸின் அண்டை வீட்டில் குடியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எப்படி கொலை செய்யப்பட்டனர் என்ற விவரத்தை காவல் துறை தெரிவிக்கவில்லை. ஆனால் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரேதப் பரிசோதனை புதன் கிழமையான இன்று நடைபெறுகிறது. இந்த இரட்டைக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்