ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும்: ஜார்ஜ் புஷ்
ஞாயிறு, 1 நவம்பர் 2009 (11:55 IST)
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர வேண்டும் என்று கூறிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இராக்கிற்கு இராணுவத்தை அனுப்பியது சரியான நடவடிக்கையே என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த "ஹிந்துஸ்தான் டைம்ஸ்'' பத்திரிகையின் மாநாட்டில் ஜார்ஜ் புஷ் பேசுகையில், நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு இராக்கின் சர்வாதிகாரி சதாம் ஹுசேனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர இதைத் தவிர வேறு வழி இல்லை. இத்தகைய நடவடிக்கைக்குப் பிறகுதான் பிற நாடுகளில் அமைதி நிலவுவதோடு இராக்கின் நிலைமையும் தற்போது மேம்பட்டுள்ளது.
கொடுங்கோலன் சர்வாதிகார ஆட்சி புரிந்த சதாம் ஹுசேன், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு அவரை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
இராக்கின் அதிபர் பதவியிலிருந்து ஹுசேனை நீக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. காரணம் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை இராக் பதுக்கி வைத்திருந்தது. குறிப்பாக அணு ஆயுதங்கள் இராக் வசம் இருந்தன. அணு ஆயுதங்கள் குறித்து பார்வையிட சர்வதேச அணுசக்தி பார்வையாளர்களை இராக்கின் முன்னாள் அதிபர் அனுமதிக்கவில்லை.
இராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவு முந்தைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் நிர்வாகத்தில் எடுக்கப்பட்டது. அமைதியான முறையில் சதாமை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் இராணுவத்தைப் பயன்படுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார். இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக வருந்துகிறேன். ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை.
உலகத்தில் மிக உறுதியான ஜனநாயகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. சகிப்பு தன்மை, அமைதி, பல்வேறு மதத்தினரை கொண்ட ஜனநாயகத்தை கொண்டது. நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரம் நீடித்து நிலைப்பதற்கு இந்தியாவில் இருந்து வந்த மக்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். இரு நாடுகளுக்கு இடையிலான `விசா' விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மிகவும் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு 'எச்1பி விசா'வை அமெரிக்க வழங்குகிறது. அவற்றை பெரும்பாலும் இந்தியர்களே பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பங்கை இந்தியா வகிக்க வேண்டும். ஆனால், அதற்கான பாதை மிகவும் சிக்கலாக உள்ளது. ஏற்கனவே, ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்தியா இருக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5-ல் இருந்து 10 ஆக உயர்த்தி விரிவுபடுத்த வேண்டும் என்று என்னுடைய ஆட்சியில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அது மிகவும் கடினமானதாக உள்ளது. எனினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஒரு இடத்தை பெற்று தருவதற்கான சாத்தியக் கூறுகளை அமெரிக்கா தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. இந்தியாவுக்கு ஒரு இடம் அளிக்கப்பட வேண்டும் என்று ஜார்ஜ் புஷ் கூறினார்.