ஈழத்தில் வீடு கட்டித் தர மராட்டிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம்!

வியாழன், 15 ஜூலை 2010 (15:05 IST)
சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயின் டெல்லி வருகையின் போது வெளியிடப்பட்ட இந்திய, சிறிலங்க கூட்டறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க, ஈழத்தில் தமிழர்களுக்கு குறைந்த செலவில் வீடு கட்டித்தரும் ஒப்பந்தம் மராட்டிய அரசு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

போரினால் வீடிழந்த ஈழத் தமிழருக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீட்டில், முறையே ரூ.2 இலட்சம் செலவில் குறைந்த செலவில் வீடு கட்டித்தரப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிப்பாட்டிற்கிணங்க, ஈழத்தின் வட பகுதியில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தரும் ஒப்பந்தத்தை மத்திய அரசு, மராட்டிய அரசு நிறுவனமான மஹாராஷ்ட்ரா வீடு மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையம் (Maharashtra Housing and Area Development Authority - MHADA) எனும் அமைப்பிற்கு அளித்துள்ளது.

இத்தகவலை வெளியிட்ட அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கெளதம் சாட்டர்ஜி, இதுவரை உள்நாட்டிலேயே குறைந்த செலவில் வீடு கட்டித் தரும் பணியை செய்துவரும் தங்களுக்கு அயல் நாட்டில் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு சவால் என்று கூறியுள்ளார்.

மும்பை நகரில் கடந்த 3 ஆண்டுகளில் 8,182 குறைந்த செலவு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது மஹாடா என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்