இந்திய மாணவர் மீது 4 ஆஸ்ட்ரேலிய இளைஞர்கள் தாக்குதல்

திங்கள், 10 ஆகஸ்ட் 2009 (11:11 IST)
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 ஆஸ்ட்ரேலிய இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் மொஹித் மங்கல். நேற்றிரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 4 ஆஸ்ட்ரேலிய இளைஞர்கள் இவரை பேஸ்பால் மட்டையால் சரமாரியாக அடித்தனர். இதில் மொஹித் பலத்த காயமடைந்தார்.

மொஹித் மீதான தாக்குதலை உறுதி செய்த இந்தூரில் உள்ள அவரது தந்தை அனில் மங்கல், தனது மகன் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மொஹித் மங்கல் ஆஸ்ட்ரேலியா சென்றதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து நிறவெறித் தாக்குதல் நடந்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட்டிடம் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்திய பின்னர், இந்திய மாணவர் மீது நடத்தப்படும் 4வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்