இங்கிலாந்தில் இந்திய டாக்ஸி ஓட்டுனர் மீது தாக்குதல்

செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (12:19 IST)
இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் உள்ள மிட்லேன்ட் பகுதியில் இந்திய டாக்சி ஓட்டுனரின் காரில் பயணம் செய்த 2 பயணிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பரத் உபாத்தியாயா (48) என்ற அந்த இந்தியர் லீசெஸ்டரில் கடந்த 4 மாதமாக டாக்சி ஓட்டி வருவதாகவும், கடந்த 6ஆம் தேதி இரவு அவரது காரில் பயணித்த ஒரு பெண், ஆண் என 2 பேர் தாக்கியதில், முகம், கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பரத் பேசுகையில், “6ஆம் தேதி இரவு காரில் இருந்த ஆண் பயணி வாகனத்தை நிறுத்தச் சொன்னார். நான் வாடகைத் தொகையைப் பற்றி கூறிக் கொண்டிருந்த போது பின்பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் கயிற்றைக் கொண்டு எனது கழுத்தை இறுக்கினார். மூச்சுத் திணறி நான் தவித்துக் கொண்டிருந்த தருணத்தில், காரில் இருந்த பெண் கத்தியைக் கொண்டு என்னைத் தாக்கினார” என்று பதற்றத்துடன் கூறினார்.

கழுத்தில் இருந்த கயிற்றை சுழற்றிவிட்டு பரத் தப்பிய போதும் அவரை விடாமல் துரத்திப் பிடித்து அவர்கள் இருவரும் தாக்கியதாக லீசெஸ்டரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரத்திடம் இருந்த பணப்பையை அவர்கள் பிடுங்கிக் கொண்டு அவரை விரட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய பின்னர், தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த போது அவரது காரையும் காணவில்லை என பரத் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்