அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்ததால் தான் மன்மோகன் சிங் பதவி தப்பியது - இலங்கை அமைச்சர்
புதன், 4 ஏப்ரல் 2012 (13:48 IST)
FILE
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்திருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் இருந்திருக்க முடியாது என இலங்கை அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று ஜெனிவா தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவே ஐக்கிய நாட்டு மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
போரில் மக்கள் இறப்பது இயல்பு தான் என்று ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். ஆனால் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை மீது கேள்வி எழுப்பப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்காவின் இரட்டை வேடம் தெரிகிறது.
போரின் இறுதி நாட்களில், சண்டையை நிறுத்தவும், ஐக்கிய நாட்டு படையை அனுமதிக்கவும் நெருக்கடிகள் வந்தன. இதனை ஏற்க மறுத்த காரணத்தினால் தான், விரோத நோக்கத்துடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவால் ஐ.நா. வில் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன்சிங் ஆட்சியில் இருக்க முடிந்திருக்காது என டியு.குணசேகர கூறினார்.