பாக். அகதிகள் முகாம்களுக்கு ஒபாமா சிறப்பு தூதர் வருகை

வாஷிங்டன் : பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை காரணமாக புலம் பெயர்நத மக்கள் தங்கியிருக்கும் அகதிகள் முகாம்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது சிறப்பு தூதரை அனுப்ப உள்ளார்.

பாகிஸ்தானில் வட மேற்கு பாகிஸ்தானிலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருருந்து தாலிபான்கள் ஏறக்குறைய ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.

அதே சமயம் தாலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் வசித்து வந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது வீடுகளை காலி செய்து விட்டு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.ஆனால் அவர்கள் போதிய உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் அவதிப்படுவதாக தகவல் வெளியானது.

அதேபோன்று ஆப்கானிஸ்தானிலும் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக, அங்கும் ஏராளமான பொதுமக்கள், தங்களது வீடுகளைவிட்டு புலம்பெயர்ந்து அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கு எத்தகைய நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக தேவை என்பதை நேரில் சென்று ஆராய்ந்து தெரிவிப்பதற்காக ரிச்சர்ட் ஹால்புரூக் என்ற அதிகாரி தலைமையில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அதிபர் பராக் ஒபாமா விரைவில் அனுப்பி வைக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்