இது ஒரு நுணுக்கமான ஓவியக் கலை. தஞ்சாவூர் ஓவியங்கள், மதுபனி ஓவியங்கள் வகையில் இந்த வர்லி ஓவியங்களையும் யாரும் எளிதில் கற்கலாம். தேவை - ஆர்வம், பொறுமை, நிதானம் மற்றும் நேரம்.
வர்லி ஓவியம் என்றழைக்கப்படும் இவ்வகை ஓவியங்களை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தம் வீட்டுச் சுவர்களில் சித்திரமாகத் தீட்டி வந்தனர்.
அன்றாட வாழ்க்கையின் நடப்புகள், நாட்டுப்புறக் கலைகள் திருவிழாக்கள் போன்றவற்றை இந்த வரைகலை மூலம் மற்றவர்களுக்கு அறிவித்தனர்.
பறவைகள், விலங்குகள், மனித உருவங்கள் என்று இயற்கையில் உள்ள உயிரினங்கள் மற்றும் திருமணம் போன்ற சடங்குகளையும் கூட இந்தச் சுவரோவியங்களில் வரைந்தனர்.
பெரும்பாலும் முக்கோணங்கள், கோடுகள், நெளிவுகள் இவற்றையே பயன்படுத்தி வரையப்படும் இவ்வகை ஓவியங்களில் உள்ள ஒவ்வொரு சிறு உருவமும் நடனம் போன்ற ஏதோ ஒரு செயலைச் செய்வதுபோல அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
நாட்டுப்புற மக்களின் எளிய வாழ்க்கையைச் சித்தரிப்பவையாகவும் அமைந்துள்ளன.
மண்ணாலான வீட்டுச் சுவர்களில் ஓவியம் தீட்ட அவர்கள் அரைத்த அரிசி மாவைப் பயன்படுத்தி வந்தனர். (நாம் மாக்கோலம் போட உபயோகிப்பது போல்)
இன்று நாமே இந்த ஓவியக்கலையை எளிதில் கற்று வீட்டு வரவேற்பறையில் சட்டத்திற்குள் ஓவியமாக மாட்டலாம். தேர்ச்சி பெற்ற ஓவிய வல்லுனர்கள் வகுப்புகள் மூலம் இக்கலையை மற்றர்களுக்கும் கற்பித்து வருகின்றனர். உலக அளவில் இந்த ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது.
சொந்த உபயோகத்திற்காக மட்டுமின்றி நன்கு தேர்ச்சி பெற்று ஓவியங்களை விற்று லாபம் சம்பாதிக்கும் தொழிலாகவும் செய்யலாம்.
காகிதம் மற்றும் துணி போன்றவற்றில் இவ் வர்லி ஓவியங்களை உருவாக்க முடியும். இனி இந்த ஓவியத்தின் மாதிரி ஒன்றை எப்படி வரைவது என்று பார்க்கலாம்.
செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :-
1. கறுப்பு நிற பாப்ளின் துணி - அரை மீட்டர் (தேவையான அளவிற்கு கத்தரித்துக் கொள்ளலாம்.)
2. கேம்லின் வெள்ளை நிற பெயின்ட் (Camlin Fabric Paint)
3) பிரஷ் - சைஸ் 1
4) வண்ணங்களைத் தண்ணீர் சேர்த்துக் கலப்பதற்கு உறுதியான தட்டு (Palette) (வெள்ளை நிறம் மட்டுமே சிறப்பாக அமைகிறது.)
5) பிரதி எடுக்க டிரேசிங் காகிதம், வெள்ளை நிற கார்பன், காகித அட்டை (Card Board)
6) பென்சில்
மேற் சொன்ன எல்லா பொருட்களும், மற்றும் வர்லி டிசைன் புத்தகங்களும் நோட்டுப் புத்தகங்கள் விற்பனை செய்யப் படும் பெரிய கடைகளில் கிடைக்கும்.
புத்தகம் விலை கொஞ்சம் கூடுதல். பலர் சேர்ந்து வாங்கலாம். மற்ற பொருட்கள் சுமார் ரூபாய் 75ற்குள் அடங்கும்.
செய்முறை :
படி 1 : வரையப் போகும் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்து டிரேசிங் செய்து கொள்ளவும்.
படி 2 : ஓவியத்தின் அளவுகளுக்கேற்றது போல் துணியை கத்தரித்துக்கொள்ளவும். (இரண்டும் 12 பை 8 அங்குலம் அளவில்)
படி 3 : நான்கு புறமும் சுமார் ஓர் அங்குல இடைவெளி விட்டு துணியில் வெள்ளை நிற கார்பன் காகிதத்தின் மேல் டிரேசிங் செய்த ஓவியத்தை வைத்து நிதானமாக ஓவியத்தின் பிரதியை எடுத்துக் கொள்ளவும்.
படி 4 : துணியை உறுதியான காகித அட்டையின் மேல் வைத்து நா ன் கு பக்கங்களிலும் பலகை ஊசிகளால் (Board Pins) மூலையில் குத்திவைத்துக் கொள்ளவும்.
படி 5 : வெள்ளை வண்ண பெயின்டை கனமான தட்டில் சிறிது ஊற்றி, 2, 3 சொட்டு நீர் ஊற்றி, கலந்துக் கொள்ளவும். (பெயின்ட் நீரோட்டமாக இல்லாமல் துணியின் மறுபக்கம் தெரியக்கூடாது.)
படி 6 : பொறுமையாக ஒவ்வொரு உருவமாக வெள்ளை நிறச் சாயத்தை நிரப்ப வேண்டும்.
உருவமாக இருக்கும் இடங்களில் முழுமையாகவும், கோடுகள் மட்டுமே இருக்கும் இடங்களில் கோடுகளாகவும் வண்ணம் தீட்ட வேண்டும்.
வண்ணம் தீட்டும் போது பட்டை பட்டையாகத் தெரியாமல் சீரான அளவில் கொடுக்க வேண்டும்.
முழுவதுமாக வண்ணம் காய்வதற்கு அரை மணி நேரம் ஆகும். கறுப்பு நிறப் பின்னணியுடன் கூடிய வெள்ளை நிற ஓவியமாகத்தான் பார்ப்பதற்குத் தெரிய வேண்டும்.
பெயின்ட் நன்கு காய்ந்த பின்பு ஊசிகளை எடுத்து விட்டு பிரேம் செய்யக் கொடுக்கலாம்.
13 பை 12 அங்குலம் அளவுள்ள ஓவியத்தை பிரேம் செய்ய சுமார் ரூ. 350 ஆகும். (தரமான பிரேம் என்றால்)
இவ்வகை ஓவியங்களைச் சுவர்களை அலங்கரிக்கும் அலங்கார ஓவியங்களாக மாட்டுவதைத் தவிர திரைச்சீலைகள், படுக்கை மற்றும் தலையணை உறை, ஜன்னல் திரைகள் முதலிய துணிகளிலும் வரையலாம். நாமாகவும் செய்யலாம், வகுப்புகளுக்குச் சென்று கற்றாலும் 2 வகுப்புகளில் கற்க முடியும்.