சத்தான கேழ்வரகு அடை செய்ய !!

தேவையான பொருட்கள் :
 
கேழ்வரகு மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 5 பல்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - 5 டீஸ்பூன்

செய்முறை :
 
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும்.
 
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை, பூண்டு தட்டியது ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவில் கொட்டவும்.
 
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரைத் தெளித்து பிசையவும். மாவு சப்பாத்தி மாவை விட சற்று தளர இருக்க வேண்டும். தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு தேய்த்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
 
கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வட்டமாக அடையைத் தட்டவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை அடையைச் சுற்றி ஊற்றி வேகவிடவும். (மூடி போட்டு வேகவைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்). ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான சத்தான கேழ்வரகு  அடை தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்