நாடாளுமன்றத்தின் நிதிநிலை கூட்டத் தொடர் பிப்ரவரி 25 ந் தேதி தொடங்குகிறது.
பிப்ரவரி 26 ந் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிராசாத் யாதவ் ரயில்வே நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) சமர்ப்பிக்க உள்ளார்.
இந்தியாவின் போக்குவரத்தில் ரயில்வேக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ரயில்வே வசதி இல்லாத பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரயில்வேயின் வரவு செலவு பெருமைப்படும் படியாக இல்லை. வரவை விட செலவு அதிகம்.
இத்தனைக்கும் பயணிகள், குறிப்பாக தென் இந்திய பயணிகள் எல்லாம் பணம் செலுத்தி டிக்கட் வாங்கித்தான் பயணம் செய்தனர்.
இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த ஆண்டு ரயில்வேயின் ரயில்வேயின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு லாலு எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளும், அதிக அளவு புதிய ரயில்களை அறிமுகப்படுத்தியதும் காரணம்.
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களை கவர ரயில் கட்டணம் நேரடியாக உயர்த்தப்படுவதில்லை.
ஆனால் மறைமுகமாக சூப்பர் பாஸ்ட், சதாப்தி, சர்சார்ஜ், படுக்கை கட்டணம் என பல்வேறு சிறப்பு கட்டணம் விதிக்கப்படுகின்றன.
முன்பு பட்ஜெட் அறிமுகப்படுத்தும் போதுதான் கட்டணம் அதிகரிக்கப்படும். இப்பொழுது வருடம் முழுவதும் புதிய புதிய நாமகரணங்களை ரயில்களுக்கு சூட்டி மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
அத்துடன் அதிக அளவு பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, சாதாரண முதல் வகுப்பு, மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாகவே இருக்கின்றன. சாதாரண மக்கள் பயணம் செய்யும் பொது பெட்டிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கின்றது.
இதன் மூலம் பயணிகள் ஒரு காலில் நின்று கொண்டு, உடம்பை அசைக்க கூட முடியாமல் நரக வேதனையுடன் பல மணிநேரம் பயணம் செய்யும் நிலைமை ஏற்படுகின்றது.
சாமானிய மக்களின் வசதிக்காக கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறிக் கொண்டே, மறுபுறம் எவ்வித வசதியும் இல்லாமல் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு சாமாணிய மனிதன் தள்ளப்படுகின்றான்.
முதல் வகுப்பு கட்டணத்திற்கும், விமான கட்டணத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை என்றவுடன், தனி விமானத்தில் கூட பயணம் செய்யும் வசதியுள்ள முதல் வகுப்பு பயணிகளுக்காக ரயில்வே கட்டணத்தை மாற்றி அமைத்து, வசதிகளை பெருக்கியது.
அதே கரிசனம் பொதுப் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கும் ரயில்வே அமைச்சர் காண்பிப்பாரா ? இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இருக்குமா ?
ரயில் டிக்கட் கட்டணத்தைவிட, முன்பதிவு, படுக்கை, அதி விரைவு வண்டி, சதாப்தி என்று பல்வேறு கூடுதல் கட்டணங்கள் வசுலிக்கப்படுவது சரியா ?
இவற்றை நீக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா .......
ரயில்வே அமைச்சருக்கு உங்கள் ஆலோசனை என்ன?
ரயில்லே நிலையங்களில் எந்த மாதிரியான வசதியை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.
முதல் வகுப்பு பயணிகளுக்கு ஈடாக மற்ற வகுப்பு பயணிகளுக்கும் ஓய்வறை வசதி தேவையா ? உங்கள் கருத்து என்ன.
ரயில்வேக்கு அதிகமாக வருவாயை ஈட்டித் தருவது சரக்கு போக்குவரத்து. தற்போது இதற்கு விதிக்கப்படும் கட்டணம் நியாயமானதா.
இதை அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா ... ? உங்கள் கருத்து என்ன
உங்கள் ஊருக்கு கூடுதல் ரயில் வசதி தேவையா, அதிக முன்பதிவு இருக்கை ஒதுக்கப்பட வேண்டுமா. இது போன்று இன்னும் இன்னும் ..............
உங்களின் எதிர்பார்ப்பு, ஆலோசனைகளை தெரிவியுங்கள்.
எங்கள் இணைய தளத்தில் உங்கள் ஆலோசனைகளை பதிவு செய்யுங்கள்.
இணைய தளத்தில் தட்டச்சு செய்ய முடியாதவர்கள் வெள்ளைத்தாளில் ஆங்கிலம், அல்லது தமிழில் உங்கள் கருத்துக்களை வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டும் எழுதி கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது கூரியரில் அனுப்பலாம்.
ஆசிரியர் வெப்துனியா-தமிழ் 2 கிருபா சங்கரி தெரு மேற்கு மாம்பலம், சென்னை-600 033. மின்-அஞ்சல் : [email protected]