மான்கள் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பு

வியாழன், 5 ஏப்ரல் 2018 (12:03 IST)
சல்மான்கான் உள்பட பாலிவுட் நட்சத்திரங்களான சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்கள் மான்கள் வேட்டையாடியதாக கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்கள் விடுவிக்கப்பட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் சல்மான்கான் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி பாலிவுட் திரையுலகம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பின் இடைவெளியில் சல்மான்கான், படக்குழுவினர்களுடன் வேட்டைக்கு சென்றார். அவர்களுடன் சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்களும் சென்றனர்.

அப்போது அபூர்வமாக காணப்படும் இரண்டு கருப்புநிற மான்களை சல்மான்கான் சுட்டு வேட்டையாடியதாக தெரிகிறது. இதுகுறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் சல்மான்கான்மீது  வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51–ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருடன் சென்ற மற்றவர்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51 உடன் இணைந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 149–ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சல்மான்கானின் தண்டனை விபரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்