தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைப்பதையே, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பியதாகவும், ஆனால், விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துவிட்டதால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது. அதனால், தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை கருதி சிலர் திமுக பக்கமும், சிலர் அதிமுக பக்கமும் செல்ல முடிவெடுத்திருப்பதாக தேமுதிக தலைமைக்கு செய்திகள் போனதாம்.
ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்தனர். அதன்பின், சமீபத்தில் வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் திமுகவில் இணைந்தார். இன்னும் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கட்சி தாவுவதற்கு தயாராக உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமலதா அவர்களை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் பிரேமலதா கட்சி நிர்வாகிகளிடம் பேசி, யார் கட்சி தாவும் முடிவில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அவர்களை அழைத்து பேசுகிறார்.
கேப்டன் கட்சியிலேயே நீடித்தால், ஆட்சி அமைக்கும் போது, உங்களுக்கு தேவையான பதவிகள் கிட்டும். தேமுதிகவின் காவல் தெய்வம் நான். உங்களை காப்பது என் கடமை என உருக்கமாக பேசுகிறாராம்.