அவரது சண்டக்கோழி, திமிரு படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு பரவலான கவனத்தை பெற்றது உண்மை. ஆனால் அதன் பிறகு வெளியான எந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸின் பக்கத்தைகூட நெருங்கவில்லை. பாண்டிய நாடு படத்தின் தெலுங்குப் பதிப்பும் தோல்வியே கண்டது.
இந்நிலையில் நான் சிகப்பு மனிதன் இந்த்ருடு என்ற பெயரில் சென்ற வாரம் ஆந்திராவில் வெளியானது. ஆச்சரியமாக படத்துக்கு பரவலான வரவேற்பு. சண்டக்கோழி, திமிருக்குப் பிறகு இந்தப் படம்தான் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் தோல்வியடைந்த படம் ஆந்திராவில் பிக்கப்பானதும் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளுக்கு சென்று படத்தை புரமோட் செய்தார் விஷால். எப்போதும் போல, இந்த வருடம் ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிப்பேன் என்று அவர் சொல்ல, இதையேதான் உங்க படம் வெளியாகும் போதெல்லாம் சொல்றீங்க என்று ஆந்திர மீடியா நேரடியாகவே விஷாலை கலாய்த்திருக்கிறது.