விஜய்யை குறி வைக்கிறாரா விஷால்? - மீண்டும் ஆக. 2 -இல் மோதல்

திங்கள், 27 ஜூலை 2015 (15:15 IST)
விஜய் போலவே நற்பணி, சமூக ஈடுபாடு என்று, தனது நடிகர் வண்ணத்துடன் அரசியல் சாயத்தையும் பூசி வருகிறார் விஷால். அவரது குறி விஜய் என கோடம்பாக்கம் முணுமுணுக்கிறது.
 
சினிமாவுக்கு வெளியே அவரது நடவடிக்கைகள் விஜய்யை ஒத்திருப்பதால் மட்டும் இந்த முணுமுணுப்பு இல்லை. பல வருடங்கள் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவராக இருந்த ஜெயசீலனை தனது மன்றங்களின் தலைவராக்கியிருக்கிறார் விஷால். 
 
மேலும், விஜய்யின் கத்தி படத்துடன் தனது பூஜை படத்தை மோதவிட்டார் விஷால். விஜய்யின் புலி படத்துடன் தனது பாயும் புலி படத்தை வெளியிட வேண்டும் என அவர் விரும்புவதாகவும் தகவல்.
 
முதல்கட்டமாக பாயும் புலியின் பாடல்களை, புலி படத்தின் பாடல்கள் வெளியாகும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிடுகின்றனர். பாடல் வெளியீட்டு தேதி மட்டுமில்லை, படம் வெளியாகும் தேதியும் ஒன்றாகவே இருக்கும் என்கிறார்கள் சிலர்.
 
பாயும் புலி செப்டம்பர் 4 -ஆம் தேதி வெளியாகும் என்று விஷால் ஏற்கனவே கூறிவிட்டதால் பாயும் புலியும், புலியும் மோத வாய்ப்பில்லை என்கிறார்கள் வேறு சிலர். 
 
புலிகள் மோதினால் பார்வையாளர்களுக்கு குஷிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்