பட்டாகத்தி சர்ச்சை… விளக்கமளித்த விஜய் சேதுபதி

சனி, 16 ஜனவரி 2021 (15:48 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் 43 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் அவர் கேக் வெட்டுவது போல வெளியான புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவர் இன்று தனது 43 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்துள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் இப்போது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் சமீபகாலங்களில் இதுபோல ரௌடிகள் கத்தி கொண்டு கேக் வெட்டி வெளியான புகைப்படங்களை வைத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து இப்போது விஜய் சேதுபதி சமூகவலைதளப் பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘வணக்கம்,

எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.
நன்றி
விஜய் சேதுபதி’ எனக் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்