விஜய் படம் - பரதனுக்கு கிடைத்த பம்பர் பரிசு

செவ்வாய், 24 நவம்பர் 2015 (16:48 IST)
விஜய்யை வைத்து படம் இயக்கி தோற்றவர்களுக்கு அடுத்த வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். என்ன அபூர்வம்... கிடைக்காது என்பது தான் உண்மை. அழகிய தமிழ் மகன் பரதனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.


 
 
அழகிய தமிழ் மகன் அனைவரும் எதிர்பார்த்த படம். விஜய்யே அப்படத்தை அதிகம் எதிர்பார்த்தார். ஒன்றுக்கொன்று முரணான இரண்டு வேடங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்று அட்டகாசமான பேக்கேஜ். திரைக்கதையில் கோட்டைவிட்டதால் பாக்ஸ் ஆபிஸில் கோட்டைவிட்டது படம்.
 
அதன் பிறகு பரதன் பல படங்களுக்கு வசனம் எழுதினார். அதில் வீரம் படமும் ஒன்று. அவர் சொன்ன கதை விஜய்க்குப் பிடித்துப் போக, அரை டஜன் இயக்குனர்கள் காத்திருக்க, அவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி பரதனுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
 
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைப்பார் என்கிறார்கள். வதந்திதான்... இன்னும் அவர் இசையமைப்பது உறுதியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்