பாவனா கடத்தல் வழக்கு: பிரபல நடிகருக்கு ஒன்றரை கோடி கேட்டு மிரட்டல் கடிதம்!!

ஞாயிறு, 25 ஜூன் 2017 (13:39 IST)
நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் திரைதுறையிரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


 
 
இதுபற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனாவின் கார் டிரைவர் மற்றும் 5 பேரை கைது செய்தனர்.
 
இந்த சம்பவத்தில் முக்கிய நபராக செயல்பட்டது பல்சர் சுனில் என தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் பாவனா விவகாரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான தீலீப்புக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.
 
ஆனால், இதனை திலீப் மறுத்தார். அதன் பிறகு ஜெயிலில் இருக்கும் பல்சர் சுனில் தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அவரது நண்பர் எனக்கூறி விஷ்ணு என்பவர் டெலிபோனில் ரூ.1½ கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் திலீப் புகார் அளித்தார்.
 
இந்நிலையில் திலீப்புக்கு பல்சர் சுனில், காக்கநாடு சப்-ஜெயிலில் இருந்து எழுதிய கடிதம் ஜெயில் முத்திரையுடன் சமூக ஊடகங்களில் வெளியானது. 
 
அந்த கடிதத்தில், திலீப் அண்ணா, நான் சுனில். ஜெயிலில் இருந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு செலவுகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே எனக்கு உடனே பணம் தரவும். அந்த பணத்தை இந்த கடிதம் கொண்டு வரும் நண்பன் விஷ்ணுவிடம் கொடுக்க வேண்டும். 
 
ஒரே தவணையாக கொடுக்க முடியாவிட்டால் 5 மாதங்களில் 5 தவணையாக கொடுக்கவும். உங்களைதான் நம்பி இருக்கிறேன். இந்த வழக்கில் உங்களது பெயரை கூறுமாறு மலையாள நடிகர், ஒரு நடிகை மற்றும் டைரக்டர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வலியறுத்தி வருகிறார்கள். நான், உங்களின் நம்பிக்கைக்கு உரியவன், ஆனால் இப்படியே எப்போதும் இருப்பேன் என்று கூற முடியாது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மலையாள அந்த நடிகர், நடிகை, இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை தீவிரமாகும் நிலையில், மலையாள திரையுலகின் முக்கிய நபர்கள் கைதாகலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்