அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் ஆஸ்கர் விருதுகளில் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படம் ஹாலிவுட்டின் பெரிய நிறுவனங்களின் படங்களை ஓரம் கட்டி ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
உலகம் முழுவதும் திரைப்படங்களுக்காக பல விருதுகள் வழங்கப்பட்டாலும், ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது உலக அளவில் மிகப்பெரும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று ஹாலிவுட்டில் நடந்து வருகிறது.
இதில் பல பிரிவுகளிலும் ஹாலிவுட் படங்கள் வென்று வரும் நிலையில் அனிமேஷன் பிரிவில் விருது வென்றுள்ள Flow படம்தான் பலரையும் வாயடைக்க செய்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது பட்டியலில் டிஸ்னி, பாரமவுண்ட் உள்ளிட்ட பெரிய ஹாலிவுட் அனிமேஷன் நிறுவனங்களின் படங்கள் இடம்பெறுவதோடு விருதுகளையும் அதிகம் வெல்கின்றன. அவற்றிற்கு எதிராக ஜப்பானின் அனிமே ஸ்டுடியோக்களே போட்டிப் போட்டு சொற்பமாகவே விருதுகளை வெல்கின்றன.
இந்நிலையில்தான் லாட்வியா நாட்டை சேர்ந்த சுயாதீன அனிமேஷன் படமான Flow ஆஸ்கரை வென்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லாட்வியா நாட்டு இயக்குனர் Gints Zilbalodis இயக்கிய இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 3.5 மில்லியன் ஈரோக்கள்தான். ஆனால் இதனுடன் போட்டியிட்டு டிஸ்னியின் Inside Out 2 திரைப்படம் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1.6 பில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்திருந்தது. ஆனாலும் போட்டியில் Flow வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டுமே க்ரவுட் ஃப்ண்டிங்காக பெறப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு பூனை மற்றும் சில விலங்குகள் ஒரு படகை பிடித்து உயிர் பிழைக்கின்றன. மொத்த உலகமும் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் அவை நிலத்தை தேடிச் செல்கின்றன. அதற்குள் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. படத்தில் ஒரு வசனம் கூட கிடையாது, விலங்குகள் சத்தமிடுவது மூலமாக மட்டுமே அவற்றின் உணர்வு நிலையை விளக்கி கதையை கொண்டு செல்கிறார்கள். இயற்கை, விலங்குகள் பற்றிய ஒரு ஆர்வத்தை அளிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருப்பது, இதுபோன்ற சுயாதீன பட முயற்சிகளை அனிமேஷனில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K