எங்களுக்கு மட்டும் தமிழ் உணர்வு இல்லாமல் போகுமா?: த்ரிஷாவின் தாய் உமா

திங்கள், 16 ஜனவரி 2017 (15:54 IST)
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பின் ஆதரவாளரான த்ரிஷாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதையடுத்து அவர் ட்விட்டரை விட்டே வெளியேறினார்.

 
இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தால் அவரின் படப்பிடிப்புக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இணையத்தில்  த்ரிஷாவுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர். 
 
இது குறித்து த்ரிஷாவின் தாய் உமா செய்தியாளர்களிடம் கூறுகையில், த்ரிஷா பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தது உண்மை  தான். வெளிநாட்டு நாய்கள் அல்லாமல் உள்நாட்டு நாய்களையே மக்கள் வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
 
த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவே தவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் தனிப்பட்ட முறையிலேயே அவர் நாய்களுக்கு  ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
 
நாங்களும் தமிழர்கள் தான். எங்களுக்கு மட்டும் தமிழ் உணர்வு இல்லாமல் போகுமா என்ன? கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக  அவர் பீட்டா விஷயத்தில் ஆர்வம் காட்டுவது இல்லை.
 
த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தால் பெரும் பிரச்சனையாகி உள்ளது. அந்த கருத்தை  த்ரிஷா தெரிவிக்கவில்லை ஹேக்கர்கள் போட்டுள்ள பதிவால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் கமிஷனரை  சந்தித்து புகார் அளித்துள்ளேன் என தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்