மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தமிழ் உணர்வே காரணம் : விஜயகாந்த்

திங்கள், 23 நவம்பர் 2015 (09:26 IST)
தமிழுக்காகவும், தமிழ் உணர்வுக்காகவும் தான் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
விஜயகாந்த் கடைசியாக விருதகிரி என்ற படத்தில் கதாநாகனாக நடித்தார். அதன் பின், அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டதால் சினிமால் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, தற்போது “ தமிழன் என்று சொல்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
 
அவரது மகன் சண்முக பாண்டியனும் இதில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடக்க விழா நேற்று (நவ.22) அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜயாகாந்த் “ நான் அரசியலில் இறங்கிய பின், சினிமாவில் நடிக்கக் கூடாது  என்று பிடிவாதமாக இருந்தேன். எனது மகன், சண்முகபாண்டியன் சினிமாவிற்கு வந்து விட்டதால,  அவருக்காக எனது மனைவி பிரேமலதாவும், மூத்த மகன் விஜய் பிரபாகரும் பல கதைகளைக் கேட்டு வந்தனர். 
 
அப்போது இந்த பட இயக்குனர் சொன்ன கதை எல்லோருக்கும் பிடித்திருந்தது. நானும் இந்தக் கதையைக் கேட்டேன். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று எனது மூத்த மகன் விஜய் பிரபாகர் கேட்டார். அரசியல் பணிகளை சொல்லி முடியாது என்றேன். நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால் சம்மதித்தேன்.
 
சண்முக பாண்டியனுக்காக இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இது மொழி படம். தமிழுக்காகவும், இந்தக் கதையில் இருந்த தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். பல புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுகமாக உள்ளனர். 
 
இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து இது மாறுபட்ட படம். மிகவும் எழுச்சியான படம்” என்று விஜயகாந்த் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்