நுங்கம்பாக்கமாக மாறிய சுவாதி கொலை வழக்கு

புதன், 12 ஜூலை 2017 (18:36 IST)
சுவாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என இயக்குநர் மாற்றியுள்ளார்.


 

 
கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அந்த வழக்கில் ராம்குமார் என்பவர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். பின் அவரும் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
இந்த கொலை சம்பவத்தை மையமாக வைத்து ரமேஷ் செல்வன் திரைப்படம் ஒன்றை இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு சுவாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்டது. இந்த படத்தின் டீஸர் வெளியானதை அடுத்து சுவாதியின் தந்தை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் மனு அளித்தார். 
 
பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என பலர் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் படத்தின் பெயரை இயக்குநர் நுங்கம்பாக்கம் என மாற்றியுள்ளார். இதுகுறித்து இயக்குநர் ரமேஷ் செல்வன் கூறியதாவது:-
 
இந்த திரைப்படத்தில் ராம்குமார் பின்னணி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இது ஒரு கற்பனைக் கதை. சமூகத்தில் சுவாதி கொலை போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள படம் இது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்