சிம்பு - நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கப்பட்ட படம் தான் இது நம்ம ஆளு. இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க கோரி, சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் லால்வானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த படத்தைத் தயாரிக்க சி்ம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் எங்களிடம் ரூ.1.9 கோடி கடனாகப் பெற்றிருந்தது. இந்தக் கடனை 36 சதவீத வட்டியுடன் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக திருப்பித் தருவதாகவும், அத்துடன் வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி விநியோக உரிமையையும் தருவதாகவும் உறுதியளித்து இருந்தனர்.
ஆனால், திடீரென வேறு ஒரு நிறுவனம் வாயிலாக தமிழகம் முழுவதும் மே 27-இல் திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், மனுதாரரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் வரை வட ஆற்காடு, தென் ஆற்காடு சினிமா விநியோக பகுதிகளான கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்