நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில்தான் காதுகுத்து… சந்தானம் ஆசை!

திங்கள், 31 ஜூலை 2023 (07:35 IST)
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்றாக அமைந்துள்ளது.

பின்னர் அதன் இரண்டாம் பாகம் வந்த நிலையில் இப்போது மூன்றாம் பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான படங்களின் வின்னராக அமைந்துள்ளது டிடி ரிட்டர்ன்ஸ்.

இந்நிலையில் இந்த படத்துக்காக அளித்த பேட்டி ஒன்றில் சந்தானம், நயன்தாரா பற்றியும் விக்னேஷ் சிவன் பற்றியும் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. அது சம்மந்தமாக அவர்களை சந்திக்க சென்ற போது எனக்கு தடபுடலாக விருந்து வைத்தார்கள். நயந்தாராவை வல்லவன் படத்தில் இருந்தே தெரியும். அவர் எனக்கு தங்கை மாதிரி. அவர் குழந்தைகளுக்கு என் மடியில்தான் உட்கார வைத்து காதுகுத்த வேண்டும் என என் ஆசையை அவர்களிடம் தெரிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்