சிரஞ்சீவியை சீண்டிய வர்மா

வெள்ளி, 30 ஜனவரி 2015 (11:26 IST)
வாரத்துக்கு ஒரு வம்பு, மாதத்துக்கு ஒரு படம் என்று திரையுலகில் திகில் கிளப்பிக் கொண்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா. அரசியல் தொடங்கி அர்ணாக்கொடிவரை இவர் கருத்து என்ற பெயரில் வாய் வைக்காத விஷயங்களே இல்லை.
அவரது சமீபத்திய அவல், நடிகர் சிரஞ்சீவி.
 
பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஆரம்பித்து, அதனை சரியாக நடத்த முடியாமல் காங்கிரஸுடன் இணைத்து, தனது 150 -வது படத்துக்கு பல ஆண்டுகளாக கதையையும் இயக்குனரையும் தேடிக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. இந்நிலையில் வர்மாவின் வம்புக்கு ஆளாகியிருக்கிறார்.
 
ட்விட்டரில் சிரஞ்சீவி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் வர்மா, சிரஞ்சீவி சினிமாவின் அனைத்து துறைகள் குறித்தும் நன்கு அறிந்தவர். அவரது 150 -வது படத்தை இயக்க மற்றவர்களைவிட அவரே தகுதியான ஆள் என்று ஒரேயடியாக தூக்கி, அப்படி அவர் அவரது படத்தை இயக்கினால், அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியத்தைவிட அது மோசமானதாக இருக்காது என்று தொபு-க்கென்று கீழே போட்டுள்ளார்.
 
இணையத்தில் புழங்கும் ஆந்திர சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஓரணியில் திரண்டு வர்மாவை புழுதிவாரி தூற்றுகிறார்கள். வர்மா விரும்பியதும் அதுதானே.

வெப்துனியாவைப் படிக்கவும்