ஊசலாட்டம் ஓய்ந்தது - அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி திட்டவட்ட அறிவிப்பு

வியாழன், 20 நவம்பர் 2014 (11:19 IST)
ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன், அரசியலைப் பார்த்து பயப்படவில்லை, அரசியலை கவனித்துக் கொண்டுதான் இருக்கேன், தமிழ் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்யணும் போன்ற வார்த்தைகளின் வழியாக அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பை இதுவரை அணையாமல் பாதுகாத்து வந்தார் ரஜினி. 
 
சமீபத்தில் நடந்த லிங்கா பாடல்கள் வெளியீட்டு விழாவிலும், அரசியலைப் பார்த்து பயமில்லை, அதன் ஆழம் தெரிந்ததால் தயங்குகிறேன் என்று பட்டும்படாமலும் பேசி அரசியல் எதிர்பார்ப்பை தக்க வைத்துக் கொண்டார். தனது படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரஜினி இந்த வார்த்தை விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்.
 
ஆனால் இந்தமுறை அப்படியல்ல. தொடர்ந்து ஜால்ரா அடிக்கும் மீடியாக்களும் ரஜினியின் வார்த்தை விளையாட்டை கிண்டலிக்க ஆரம்பித்தன. அதனாலா தெரியவில்லை. கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு வந்த ரஜினி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டேன் என்று பேட்டி தந்துள்ளார்.
 
இதற்கு மேலும் ஊடகங்கள் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற யானைக்கால் வியாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் வேறு வேலை பார்ப்பது நலம். 

வெப்துனியாவைப் படிக்கவும்