விஷாலுடன் நடிக்கும் ராதாரவி - பகையை மறக்க வைத்த மருது?

திங்கள், 2 நவம்பர் 2015 (11:44 IST)
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், சரத்குமார் அணியும் எப்படி மோதிக் கொண்டன என்பது அனைவருக்கும் தெரியும். இப்படியொரு பகை நடிகர் சங்கத்தில் மூல முக்கிய காரணமாக இருந்தவர் ராதாரவி.


 


மூத்த உறுப்பினர்களையும் ஏக வசனத்தில் பேசி தனது பெயரை சரி செய்ய முடியாதபடி பழுதாக்கிக் கொண்டார். விஷாலை நாய் என்று சரமாரியாக திட்டியதால், தேர்தலில் ராதாரவி எந்தப் பதவிக்குப் போட்டியிடுகிறாரோ, அதே பதவிக்கு போட்டியிடுவேன் என்று விஷால் சூளுரைத்து, அதேபோல் ராதாரவிக்கு எதிராக போட்டியிட்டு பொதுச்செயலாளர் பதவியை வென்றெடுத்தார்.
 
தேர்தலுக்குப் பிறகும் இந்த விரோதம் தொடரும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் இணக்கமாகிவிட்டனர். சமீபத்திய செய்தி, விஷால் நடிக்கும் படத்தில் ராதாரவியும் நடிக்கிறார்.
 
பாண்டிராஜின் கதகளி படத்தில் நடித்துவரும் விஷால் அடுத்து, கொம்பன் பட இயக்குனர் முத்தையாவின் மருது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்க ராதாரவியிடம் பேசியிருப்பதாகவும், அவரும் தனது சம்மதத்தை தெரிவித்திருப்பதாகவும் உறுதி செய்யப்படாத செய்தி ஒன்று உலவுகிறது.
 
இது உண்மையானால், நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்