பேய்த்தனமாக மோதவிருக்கும் பிசாசும், முனி 3 -யும்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (12:45 IST)
இது பேய்களின் சீஸன். ஆளுக்கொரு பேய் படத்துடன் பயமுறுத்துவதாகச் சொல்லி சிரிப்பு காட்டுகிறார்கள். பயமுறுத்துவதைவிட சிரிக்க வைப்பது எளிது, ரசிகர்களும் சிரிப்பதையே விரும்புகிறார்கள் என்பது தெரிந்த பிறகு பேய் படத்தை சிரிக்க சிரிக்க எடுத்து வருகின்றனர். இதற்கு பிள்ளையார்சுழி போட்டது ராகவா லாரன்சின் காஞ்சனா.
அந்தப் படத்தின் அடுத்த பாகமான முனி 3 - கங்கா படத்தை டிசம்பர் 25 வெளியிடுவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் லாரன்ஸ். அதே டிசம்பர் மாதம், தான் தயாரித்திருக்கும் பிசாசு படத்தை வெளியிட விரும்புகிறார் பாலா. ஒரே நேரத்தில் இரண்டு பேய்கள். 
 
இரண்டுமே ரசிகர்கள் பார்க்க விரும்பும் பேய் படங்கள் என்பதால் மோதல் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இன்னொரு ஆறுதல் செய்தி. பிசாசு படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது. அப்பா ராம.நாராயணனைப் போலவே மகன் முரளியும் கரன்சி எதில் காய்க்கும், எந்த காலத்தில் அதிகம் காய்க்கும் என்பதை அறிந்து காய் நகர்த்தக் கூடியவர். அவர் ஒரு மோதலை விரும்ப மாட்டார். பிசாசு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்