பழைய நடிகர்களுக்கு பென்ஷன் வழங்கும் புதிய ஹீரோ

வெள்ளி, 3 ஜூன் 2016 (13:27 IST)
கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும், உதவி என்று கேட்டால் கோடம்பாக்கத்தில் இருப்பவர்களுக்கு கிள்ளிக் கொடுக்கக் கூட மனசு வராது. 


 

 
ஆனாலும், விஷால், சூர்யா, கார்த்தி, ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா போன்ற ஒருசிலர் தாராள மனதுடையவர்கள். அதிலும், விஷால் எல்லோரையும் விட ஒருபடி மேல். 
 
கடன் வாங்கி மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார். அந்த நல்லவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் ‘மெட்ரோ’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் சிரிஷ். 
 
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 80 வயதைக் கடந்தவர்களுக்கு, ஒரு வருஷத்துக்கான பென்ஷன் வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சிரிஷ். தன்னுடைய முதல் படமான ‘மெட்ரோ’வுக்கு வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காகக் கொடுத்துள்ளார்.

இந்த ஐடியாவை அவரிடம் சொன்னதே நடிகர் சங்க செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும்தானாம். ‘நல்ல ஐடியாவே இருக்கே…’ என்று வியந்த சிரிஷ், உடனடியாக அதைச் செயல்படுத்தியும் இருக்கிறார். அத்துடன், அடுத்த இரண்டு வருடங்களுக்கான பென்ஷன் தொகையையும் தானே தருவதாக விஷாலிடமும், கார்த்தியிடமும் உறுதி அளித்திருக்கிறார் சிரிஷ். 
 
முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, உதவி செய்யும் அவருடைய நல்ல குணம் வெளிப்பட்டிருப்பது கண்டு அனைவரும் வியக்கிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்