இன்னும் சம்பளம் தரவில்லை –மெர்சல் மேஜிக் மேன் புலம்பல்!

வியாழன், 15 நவம்பர் 2018 (14:22 IST)
மெர்சல் படத்தில் பணிபுரிந்த மேஜிக் மேனுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்று அந்த மேஜிக் கலைஞர் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலிஸானது மெர்சல் திரைப்படம். படம் சுமாராக இருந்தாலும் தமிழக பாஜகவினர் தந்த இலவச விளம்பரத்தால் படம் நன்றாக ஓடியது. மிகபெரிய வசூல் சாதனை என்றும் கூறப்பட்டது. பாகுபலி போல சீனாவில் ரிலீஸாகி வசூல் சாதனை நிகழ்த்தியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் நடித்த விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்ததாக செய்திகள் வெளியாயின.

இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஏனென்றால் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் ஒரு வருடம் ஆகியும் தங்களது அடுத்த தயாரிப்பை இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தங்கள் விநியோக நிறுவனத்தினையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. 40 ஆண்டுகால சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் அந்த நிறுவனம் இவ்வளவு இடைவெளி விட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தேகங்கள் ஒருபுறம் இருக்க தற்போது மெர்சல் படத்தின் மேஜிக் சம்மந்தப்பட்ட காட்சிகளில் வேலை செய்த மேஜிக் நிபுணர் தனக்கு இன்னும் அந்த படத்திற்கான சம்பள பாக்கி தரப்படவில்லை என வீடியோ மூலம் புகார் தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஓராண்டாக போராடி வருவதாகவும் ஆனால் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என புகார் கூறியுள்ளார்.

வசூல் சாதனை செய்த படத்தில் பணிபுரிந்த ஒரு கலைஞருக்கும் சம்பளப்பாக்கி வைத்திருப்பது புரியாத புதிராக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்