படத்தைப் பார்த்துவிட்டு தற்கொலை செய்த நடிகர் : திரையுலகினர் அதிர்ச்சி

செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (10:58 IST)
தான் தயாரித்த படத்தை பார்த்துவிட்டு, அந்த படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மலையாள சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் வசிப்பவர் அஜய் கிருஷ்ணன்(28). அவர் சில தொலைக்காட்சி சீரியல்களிலும், நடிகர் பிருத்திவிராஜ் நடித்த மெம்மரீஸ், சீன் 1 நம்முடைய வீடு உள்பட சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
 
சினிமா தயாரிப்பாளராக மாறிய அவர், நடிகர் ஆஸிப் அலியை வைத்து “அவருடே ராவுகள்” என்ற படத்தை தாயாரித்து வந்தார். இதுதான் அவரின் முதல் படம். அந்த படத்தில் சில முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ரூ.4 கோடி செலவு செய்து அஜய் அந்த படத்தை எடுத்திருந்தார்.
 
அந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து வேலைகளும் முடிந்து, படம் வெளிவர தயாரானது. 
 
சில நாட்களுக்கு முன்பு, அந்த படம் அவருக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அந்த படம் திருப்தியளிக்கவில்லை என்று தெரிகிறது. இவ்வளவு செலவு செய்து எடுத்த படம், எங்கே தோல்வி அடைந்து விடுமோ என்று அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். 
 
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
ஒரு தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், மலையாள திரையுலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்