அனிதா குப்புசாமி மீது புகாரளித்த சிறுமிகள்! – சிசிடிவியால் அம்பலமான உண்மை!

புதன், 9 டிசம்பர் 2020 (11:59 IST)
பிரபல கிராமிய பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர் வேலைக்கு வந்த சகோதாரிகள் இருவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் வழக்கு குறித்த சிசிடிவி காட்சிகள் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரபல சினிமா பாடகராகவும், கிராமிய பாடகராகவும் இருந்து வருபவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வரும் இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் ஆர்கானிக் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் செய்யும் சிறு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இதில் பணிபுரிந்து வரும் இரண்டு சகோதரிகளுக்கு சரியான சம்பளம் தராமல் இருந்ததாகவும், சம்பளம் கேட்டதற்கு வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் வெளியான புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெண்களின் தாயார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் குப்புசாமி வீட்டு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் குப்புசாமி தம்பதியினர் சகோதரிகளை அடைத்து வைக்கவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சகோதரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிந்ததற்கு குப்புசாமி தம்பதியினர் ரூ.200 சம்பளமாக தந்துள்ளனர். பிறகு அவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர்களது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது வேலை பார்த்த பெண்களின் தாயார் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் குப்புசாமி தம்பதியினர் அந்த பெண்கள் பணிக்கு வர வேண்டாம் என கூறியதாகவும், இதனால் பெண்களின் தாயார் காவல் நிலையத்தில் போலியான புகார் அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்