காக்கிச்சட்டை அணிந்த கதிர்

புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:48 IST)
வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து வரும் கதிர், முதன்முறையாக காக்கிச்சட்டை அணிந்து போலீஸாக நடித்திருக்கிறார்.


 

 
‘மதயானைக் கூட்டம்’ மூலம் அறிமுகமானவர் கதிர். ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’ படங்களில் நடித்துள்ள கதிர், சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதிக்குத் தம்பியாகவும், வரலட்சுமிக்கு காதலனாகவும் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சிகை’, அவருக்குள் இருக்கும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

தொடர்ந்து, ‘சத்ரு’ படத்துக்காக முதன்முதலில் போலீஸாக நடித்திருக்கிறார் கதிர். சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் நவீன் நன்சுண்டான். ‘ராட்டினம்’ படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, சுஜா வாருணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

“உங்களை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கிற படமாக ‘சத்ரு’ இருக்கும். இந்த கேரக்டருக்கு சில நடிகர்களைப் பார்த்தபோது, நேர்மையான போலீஸ் அதிகாரிக்கான உடல்வாகும், உடல்மொழியும் கதிரிடம் இருந்தன. தமிழ் சினிமா நடிகர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நடிகரும் ஒருமுறையாவது போலீஸ் வேடத்தில் நடித்திருப்பர். அந்தப் படம், அவர்களுக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்திருக்கும். கதிருக்கு இந்தப் படம் ஸ்டார் அந்தஸ்தைக் கொடுக்கும்” என்கிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டான்.

வெப்துனியாவைப் படிக்கவும்