என் நாவலின் காப்பி இல்லை… கிடார் கம்பி மேலே நின்று – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எழுத்தாளர்!

புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:03 IST)
எழுத்தாளர் பா ராகவன் எழுதிய இறவான் என்ற நாவலின் காப்பிதான் கௌதம் மேனன் இயக்கிய கிடார் கம்பி மேலே நின்று திரைப்படம் என்று புகார் எழுந்து சர்ச்சையைக் கிளப்பியது.

நவரசா ஆந்தாலஜியில் நடிகர் சூர்யா நடிக்க, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம் கிடார் கம்பி மேலே நின்று. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் பணியாற்ற கதாநாயகியாக பிரயாகா மார்டின் நடித்திருந்தார். ஆனால் வழக்கமான கௌதம் மேனன் காதல் க்ளிஷே திரைப்படமாக இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் எழுத்தாளர் பா ராகவனின் இறவான் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த எழுத்தாளர் இன்னும் அந்த படத்தைப் பார்க்கவில்லை என்றும் பார்த்ததும் இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது படத்தை பார்த்துவிட்டு குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அவரின் சமூகவலைதளப் பதிவில் ‘கிதார் கம்பி பார்த்துவிட்டேன். இறவானுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எட்வினின் சிம்ஃபொனி முயற்சி தோற்றுப் போவதன் அவல அழகுதான் அந்நாவலின் மையப் புள்ளி. நிகழாத அந்தச் சம்பவத்தை அவன் தன் மனத்துக்குள் ஒத்திகை முதல் அரங்கேற்றம் வரை நடத்திப் பார்த்துக் கொள்வதுதான் கதை உச்சம் கொள்ளும் இடம். கௌதம் மேனனின் படத்தில் இந்த ஜாடைகூட இல்லை. இதில் கதாநாயகன் தனது லட்சியத்தில் வென்று, காதலில் தோற்கிறான். இறவான் காதல் கதையல்ல. இந்தப் படத்தில் காதலைத் தவிர வேறெதுவும் இல்லை. இசை உள்பட.’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்