திரைக்கலைஞர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்… முதல்வருக்கு சேரன் வேண்டுகோள்!

சனி, 5 ஜூன் 2021 (08:04 IST)

தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு வீடு என்ற திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் நலிவடைந்த திரைக் கலைஞர்களுக்கும் அதுபோல வழங்கப்பட வேண்டும் என இயக்குனர் சேரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது சம்மந்தமாக சேரன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

திட்டங்கள் சிறப்பு சார்.. எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது.. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன். விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச் சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை தான் இருக்கிறது. வியாபாரம் சாராதது தான் மக்களுக்கான கலை.. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்.

மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்சனைகளில் இருக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்