சூதாடி ட்ராப், வட சென்னை ஸ்டார்ட் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்

ஞாயிறு, 24 மே 2015 (13:55 IST)
தனுஷ் தனது ட்விட்டர் செய்தியில், வரும் செப்டம்பர் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதாகவும், படத்துக்கு வட சென்னை என்று பெயர் வைத்திருப்பதாகவும், சமந்தா ஹீரோயினாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஆடுகளம் படத்துக்குப் பிறகு வட சென்னை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தார். அந்த கதையில் கார்த்தி நடிக்க மறுத்ததாக முதலில் செய்திகள் வந்தன. பிறகு சிம்பு நடிப்பதாகவும், துரை தயாநிதி தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. 
 
ஆனால், வட சென்னை டேக் ஆஃப் ஆகவில்லை. வெற்றிமாறன் படத்தயாரிப்பில் கவனம் செலுத்தினார். 
 
துரை தயாநிதிக்கு இரு படங்கள் இயக்கி தருவதாக வெற்றிமாறன் முன்பணம் பெற்றிருந்தார். படம் இயக்கி தராததால் பணத்தை திருப்பித்தர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால், விசாரணை என்ற படத்தை சொந்தமாக குறைந்த பொருட்செலவில் இயக்கி தயாரித்தார். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து கடனை அடைக்கலாம் என திட்டம். 
 
இந்நிலையில் தனுஷ் வெற்றிமாறன் தர வேண்டிய பணத்தை தயாநிதிக்கு தந்ததாக கூறப்பட்டது. அதற்குப் பதில் வெற்றிமாறன் அவரை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்குவதாகவும் தீர்மானமானது. சில வாரங்கள் முன்புவரை சூதாடிதான் வெற்றிமாறனின் அடுத்தப் படம் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் வட சென்னையை தொடங்குவதாக தனுஷ் அறிவித்துள்ளார். சூதாடி உண்மையில் வெற்றிமாறனின் கதை கிடையாது. அவரது உதவியாளரின் கதை. அதை படமாக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. அதனால்தான் அப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெற்றிமாறனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
விசாரணை விரைவில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்